கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றி வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது மருத்துவப் பட்டதாரி மைதிலி, டைபாய்டு காய்ச்சலால் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் மருத்துவத் துறையையும் மாநிலத்தையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. தன்னுடைய கடின உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் அனைவரையும் ஈர்த்த இந்த இளம் மருத்துவர், உடல்நலக் குறைவால் தனிமையில் போராடி மரணமடைந்தது அனைவரையும் கலங்கச் செய்கிறது.
மைதிலி, தெலுங்கானா மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஐந்து ஆண்டுகள் மருத்துவப் படிப்பை முடித்து, கடந்த ஆறு மாதங்களாக கர்நாடகாவின் கொப்பல் அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றி வந்தார்.
கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் தனியாகவே வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். இருப்பினும், உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு விரிவான சோதனைகளை நடத்தியது.
மருத்துவக் குழுவினர், அவருக்கு ஏதேனும் வைரஸ் தொற்று உள்ளதோ என்று சந்தேகித்து ரத்தப் பரிசோதனை மேற்கொண்டனர். அதில், டைபாய்டு காய்ச்சல் உறுதியானது. உடனடியாக சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. ஆனாலும், அவரது உடல்நிலை மோசமடைந்தது.
தொடர்ந்து ரத்த மாத்திரைகளைச் சேகரித்து அடுத்தகட்ட சோதனைக்கு அனுப்பியிருந்தனர். இருப்பினும், சோதனை முடிவுகள் வருவதற்கு முன்பே, இன்று அதிகாலை 4.30 மணிக்கு மைதிலி உயிரிழந்தார்.இந்தச் சம்பவம், டைபாய்டு போன்ற எளிய நோயால் கூட மருத்துவத் துறையினர் பாதிப்படையலாம் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
மருத்துவமனைத் தரப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, “எந்த வகையான காய்ச்சலாக இருந்தாலும், மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு மேல் நீடித்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். முறையான சோதனைகள், சிகிச்சைகள் மற்றும் உணவு முறைகளைப் பின்பற்றுவது அவசியம்.
சிறு அலட்சியமே பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மைதிலியின் உடல், தெலுங்கானாவிற்கு அனுப்பி வைக்கப்படுவதற்கு முன், அவர் பணியாற்றிய கொப்பல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு, அவருடன் இணைந்து பணியாற்றிய சக பயிற்சி மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள், உடலைச் சுற்றி நின்று கண்ணீர் விட்டனர். “அவர் எப்போதும் தன்னம்பிக்கையானவராக இருந்தார். நோயால் பாதிக்கப்பட்டபோதும், நோயாளிகளுக்காகவே உழைத்தார்.
இது நம்மை அமைதியின்றி விட்டுவிட்டது” என்று ஒரு சக மருத்துவர் கூறினார். இந்தக் காட்சிகள், அங்கு இருந்த அனைவரையும் கலங்கச் செய்தன.மைதிலியின் மரணம், பொது மக்களிடையே காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட ஆரோக்கியத் துறை, டைபாய்டு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இளம் மருத்துவரின் திடீர் மரணம், மருத்துவத் துறையில் பாதுகாப்பு மற்றும் உடல்நலக் கவனிப்பைப் பற்றிய விவாதங்களைத் தூண்டியுள்ளது.