திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே, மாற்றுத்திறனாளி இளைஞரை திருமணம் செய்து சில நாட்களிலேயே பணம் மற்றும் நகைகளுடன் மாயமான மணப்பெண் மற்றும் திருமண புரோக்கர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழனி அருகே உள்ள கோதைமங்கலம் பகுதியைச் சேர்ந்த 29 வயதான பாலகிருஷ்ணன், பேச்சு மற்றும் கேட்கும் திறன் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளி. வீட்டிலேயே இருந்து வந்த அவருக்காக குடும்பத்தினர் திருமண வரன் தேடி வந்தனர்.
அப்போது விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சில திருமண புரோக்கர்கள், சாத்தூர் பகுதியைச் சேர்ந்த ராமலட்சுமி என்ற பெண்ணை அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்த திருமண ஏற்பாட்டிற்காக புரோக்கர்களுக்கு பணம் வழங்கப்பட்டதுடன், மணப்பெண்ணுக்கும் தங்க நகைகள் அணிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருமணத்திற்குப் பிறகு, ராமலட்சுமி சுமார் 10 நாட்கள் பாலகிருஷ்ணன் குடும்பத்துடன் வாழ்ந்துள்ளார். பின்னர் வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணத்துடன் திடீரென மாயமானதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மணப்பெண்ணையும் திருமண ஏற்பாட்டாளர்களையும் தொடர்புகொள்ள முயன்றபோது, அவர்களும் தலைமறைவாகி இருந்ததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் பாலகிருஷ்ணன் குடும்பத்தினர் பழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், திட்டமிட்டு திருமணம் நடத்தி பணம் மற்றும் நகைகளை மோசடி செய்திருக்கலாம் என்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மணப்பெண் ராமலட்சுமி மற்றும் திருமண புரோக்கர்கள் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்து பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றை பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மாற்றுத்திறனாளி இளைஞரின் நிலையை பயன்படுத்தி திருமணம் என்ற பெயரில் மோசடி நடைபெற்றிருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமண ஏற்பாடுகளில் குடும்பத்தினர் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்ற கருத்தும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.