சமூக ஊடகங்களில் ரீல்ஸ் வீடியோக்களுக்காக பிரபலமான பெண், தனது கணவரை கழுத்தை நெரித்து கொன்றதோடு, அவரது கள்ளக்காதலன் துப்பாக்கியால் மார்பில் மூன்று குண்டுகள் பதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத்துடன் வாழ்ந்து வந்த ராகுல் என்பவரின் உடல் வாயால் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில், அஞ்சலி மற்றும் அஜய் என்பவர்கள் சதி செய்து கொலை செய்ததாகத் தெரியவந்துள்ளது. இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம், ஆகவன்பூர் பகுதியைச் சேர்ந்த ராகுல் (35), தனது மனைவி அஞ்சலி (32) ஆகியோருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தத் தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். அஞ்சலி, சமூக ஊடகங்களில் ரீல்ஸ் வீடியோக்களைத் தொடர்ந்து பதிவிடுவதன் மூலம் ஆயிரக்கணக்கான பாலோவர்ஸ்களைப் பெற்றிருந்தார்.
குடும்ப உறுப்பினர்களுடன் வெளியே சென்று அந்தக் காட்சிகளை வீடியோவாகப் பதிவிட்டு பகிர்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.இந்நிலையில், சமீபத்தில் ராகுலுடன் இணைந்து ரீல்ஸ் வீடியோ ஒன்றைப் பதிவிட்ட அஞ்சலி, கமெண்ட்ஸ் பகுதியில் சிலர் “உங்கள் கணவர் உங்களுக்கு ஏற்றவர் இல்லை, அவர் அழகாக இல்லை” என விமர்சித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அஞ்சலி, தனது கணவருடன் ரீல்ஸ் பதிவிடுவதைத் தவிர்த்து வந்தார். இதன் பிறகு, அதே பகுதியைச் சேர்ந்த சமூக ஊடக பிரபலமான அஜய் (28) உடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.இருவரும் இணைந்து ரீல்ஸ் வீடியோக்களைத் தொடர்ந்து பதிவிட்டு வந்தனர். நாளடைவில் இந்தப் பழக்கம் நெருக்கமான உறவாக மாறியது.
ராகுல் வேலைக்குச் சென்றிருக்கும் நேரங்களில் அஞ்சலி வீட்டில் அஜய்யை அழைத்து தனிமையில் இருந்ததாகத் தெரிகிறது. சம்பவத்தன்று, வழக்கம்போல் ராகுல் பணிக்குச் சென்றிருந்தார். அப்போது அஞ்சலி, அஜய்யை வீட்டிற்கு அழைத்திருந்தார். பேருந்தைத் தவறவிட்டு வீட்டிற்குத் திரும்பிய ராகுல், இருவரையும் தனிமையில் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
கோபத்தில் இருவரிடமும் கேள்வி எழுப்பி கண்டித்தார். இதில் அஜய்யுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில் அஞ்சலி, தனது கணவரின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். அப்போது அஜய், தனது துப்பாக்கியால் ராகுலின் மார்புப் பகுதியில் மூன்று தோட்டாக்கள் பதித்ததாக போலீஸ் தகவல்.இருவரும் சேர்ந்து ராகுலின் உடலை இருசக்கர வாகனத்தில் ஏற்றி, அருகிலுள்ள வாயால் பகுதிக்குக் கொண்டு சென்று வீசினர்.
தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸ், அப்பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதன் அடிப்படையில் அஜய்யை முதலில் கைது செய்து விசாரித்ததில், அஞ்சலியும் சதியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.இருவரையும் கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இது சமூக ஊடக உறவுகள் மூலம் ஏற்பட்ட துர நிகழ்வுகளில் மோசமானதாக பார்க்கப்படுகிறது.