
பழம்பெரும் நடிகையும் தயாரிப்பாளருமான கிருஷ்ணவேணி, ஹைதராபாத்தில் காலமானார். அவருக்கு வயது 103.
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்கத் தொடங்கிய கிருஷ்ணவேணி, தெலுங்கு, தமிழில் சில படங்களில் நடித்துள்ளார். தமிழில், புதுமைப்பித்தன் கதை, வசனம் எழுதி 1948-ம் ஆண்டு வெளியான ‘காமவல்லி’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார். 1939-ம் ஆண்டு மிர்சாபுரம் ஜமீன், மேகா வெங்கட்ராமையா அப்பா ராவ் பகதூரை திருமணம் செய்துகொண்டார்.பின்னர் இருவரும் சென்னையில் ஷோபனாசாலா ஸ்டூடியோஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி, அதன் மூலம் தெலுங்கு படங்களைத் தயாரித்து வந்தனர்.
பிரபல தெலுங்கு நடிகர் என்.டி.ராமராவ், நடிகை அஞ்சலி தேவி, இசை அமைப்பாளரும் பாடகருமான கண்டசாலா ஆகியோரை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் கிருஷ்ணவேணி. ஹைதராபாத் ஃபிலிம் நகரில் வசித்து வந்த அவர், வயது முதிர்வு தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் காலமானார். அவர் மறைவுக்குத் தெலுங்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.