தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் நடிகர் ரவி மோகன் தனது குடும்ப வாழ்க்கை குறித்து பல அதிர்ச்சி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது மனைவி ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை மனஅழுத்தத்திலும் கட்டுப்பாட்டிலும் வைத்திருந்ததாக குற்றம் சாட்டினார். மேலும், “மூன்று எழுத்து இட்லி நடிகை” என மறைமுகமாக குறிப்பிட்டு, தனது குடும்ப வாழ்க்கை சீர்குலைந்ததற்கும் காரணம் அவர்தான் என தெரிவித்தார்.
கண்ணீர் மல்க பேசிய ரவிமோகன்
செய்தியாளர் சந்திப்பில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய ரவி மோகன், தனது தோழி கெனிஷா சென்னை நகரை விட்டு வெளியேற முடிவு செய்திருப்பது குறித்து வேதனை தெரிவித்தார்.
“தேவையில்லாத அவமானங்களை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை” என்று கூறிய அவர், ஒரு கட்டத்தில் கண்ணீர் விட்டார்.
“பிள்ளைகளுக்காக அமைதியாக இருந்தேன்”
தனது திருமண வாழ்க்கை குறித்து பேசுகையில், “ஒரே நாளில் விவாகரத்து செய்து இருக்க முடியும். ஆனால் என் பிள்ளைகளுக்காக அமைதியாக இருந்தேன்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், “எனக்கு கஷ்டம் வந்தபோதெல்லாம் என்னுடன் இருந்தவர் என் தோழி கெனிஷா. வெளிப்புற அழகுக்காக யாரிடமும் செல்ல வேண்டுமென்றிருந்தால், அதைப் பல ஆண்டுகளுக்கு முன்பே செய்திருப்பேன்” என்றும் கூறினார்.
கடன், சைபர் துன்புறுத்தல் குற்றச்சாட்டு
தனது மீது பல கோடி ரூபாய் கடன்களும் வழக்குகளும் இருப்பதாக கூறிய ரவிமோகன், சமூக வலைதளங்களில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் எடிட் செய்யப்பட்ட விஷயங்கள் பரப்பப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
“சைபர் துன்புறுத்தலால் பலர் உயிரிழந்திருக்கிறார்கள். அதுபோன்ற சூழலில் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்” என்றும் அவர் தெரிவித்தார்.
“எனக்கு சொந்த வங்கி கணக்கே இல்லை”
ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக கூறிய அவர், “என் பெயரில் ஒரு வங்கிக் கணக்கு கூட இல்லை. நான் சம்பாதித்த பணத்தை கூட சுதந்திரமாக செலவு செய்ய முடியவில்லை” என்று குற்றம்சாட்டினார்.
மேலும், “மனைவி குடும்பத்தின் மருத்துவ செலவுகளுக்காக மாதந்தோறும் பணம் அனுப்பி வந்தேன்” என்றும் அவர் கூறினார்.
“மூன்று எழுத்து நடிகை” குறித்து பரபரப்பு
செய்தியாளர் சந்திப்பின் போது, “என் குடும்பத்தை கெடுத்தது மூன்று எழுத்து இட்லி நடிகைதான். செய்வதை செய்துவிட்டு பெண்ணியம் பேசுகிறார்” என்று அவர் மறைமுகமாக விமர்சித்தது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் அவர் குறிப்பிட்ட நபரின் பெயரை வெளிப்படையாக கூறவில்லை.
ரவிமோகனின் இந்த குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ பதில் வெளியாகவில்லை.