தெலங்கானாவின் மல்கஜ்கிரி பகுதியில் பெண்களுக்கு எதிரான இரவு நேர தொந்தரவுகள் அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில், புதிய பெண் போலீஸ் கமிஷனர் மேற்கொண்ட அண்டர்கவர் நடவடிக்கை பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மல்கஜ்கிரி போலீஸ் கமிஷனராக சமீபத்தில் பொறுப்பேற்ற சுமதி, பெண்கள் இரவு நேரங்களில் பாதுகாப்பாக வெளியே செல்ல முடியாத சூழல் இருப்பதாக கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து, நேரடியாக களத்தில் இறங்கி ஆய்வு செய்ய முடிவு செய்தார்.
இதற்காக அவர் சீருடை அணியாமல், சாதாரண பெண்ணைப் போல நள்ளிரவு நேரத்தில் பேருந்து நிலையம் அருகே தனியாக நின்றதாக கூறப்படுகிறது. அவரைச் சுற்றி பாதுகாப்பு ஏற்பாடாக போலீசார் மறைமுகமாக கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
சில நேரத்திலேயே அங்கு வந்த சில ஆண்கள், அவரிடம் அத்துமீறி பேச முயன்றதாகவும், தொந்தரவு செய்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை பல மணி நேரம் நீடித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பெண்களை சீண்டியதாக சந்தேகிக்கப்படும் சுமார் 40 பேரை போலீசார் பிடித்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர்களுக்கு பெண்களின் பாதுகாப்பு, பொதுவெளி நடத்தை மற்றும் சட்ட விளைவுகள் குறித்து ஆலோசனையும் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக நேரடியாக களத்தில் இறங்கி நடவடிக்கை எடுத்த கமிஷனர் சுமதியின் இந்த முயற்சி சமூக வலைதளங்களில் பாராட்டுகளை பெற்று வருகிறது.
“பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் நேரடியாக நிலைமையை புரிந்துகொள்ள முயற்சிப்பது நல்ல முன்னுதாரணம்” என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மல்கஜ்கிரியின் முதல் பெண் போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்ற சுமதி, ஆரம்ப கட்டத்திலேயே பெண்களின் பாதுகாப்பை முன்னுரிமையாக எடுத்துக்கொண்டிருப்பது தெலங்கானா போலீஸ் துறையில் கவனிக்கத்தக்க நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.