தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம் கிளமங்கலம் அருகே உள்ள டாட்டா நிறுவனத்தின் மொபைல் உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலையில், பெண் தொழிலாளர்களுக்கான விடுதியில் ரகசிய கேமரா கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, 2,000-க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருவர் கைது செய்யப்பட்டு, அவரது காதலன் தொடர்பான விசாரணை நடக்கிறது. சென்னையிலிருந்து சிறப்பு குழு வரவழைக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த 25,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மூன்று ஷிப்டுகளாக வேலை செய்கின்றனர். குறிப்பாக, வெளி மாநிலங்களைச் சேர்ந்த பெண்களுக்காக உத்தரப்பள்ளி அருகே நாகமங்கலம் பகுதியில் ‘பிடிஎல் ரெசிடென்சி’ என்ற பெயரில் 16 அடுக்குகள் கொண்ட எட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இவற்றில் நான்கு பேருக்கும் ஒரு அறை என்ற வகையில் பெண்கள் தங்குகின்றனர்.கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2), நான்காவது பிளாக்கின் எட்டாவது மாடியில் உள்ள 808 அறையில் தங்கியிருந்த நான்கு பெண்கள் இந்த சம்பவத்தின் பாதிக்கப்பட்டவர்கள்.
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த அனாமிகா என்ற பெண் கழிவறைக்கு சென்றபோது, அங்கு ரகசிய கேமரா இருப்பதைக் கண்டார். உடனடியாக அறையில் இருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நீலுகுமாரி குப்தாவுக்கு தகவல் தெரிவித்தார்.
நீலுகுமாரி அங்கு வந்து கேமராவைப் பறித்து, ஜன்னல் வழியாக கீழே தூக்கி எறிந்தார். பின்னர் அறையை சோதித்தபோது, ஒரு கட்டலின் கீழ் மேலும் ஒரு கேமரா சாதனம் கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றை எடுத்துக்கொண்டு விடுதி காப்பாளர் சரிதாவிடம் நீலுகுமாரி கொடுத்தார்.
விசாரணையில் வெளிப்பட்ட உண்மைகள்
சரிதாவின் விசாரணையின்போது, நீலுகுமாரி தனது காதலன், கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த சந்தோஷ், தனக்கு ரகசிய கேமராவைக் கொடுத்து பாத்ரூமில் வைக்கச் சொன்னதாக ஒப்புக்கொண்டார்.
“அவர் சொன்னபடி, பையில் மறைத்துக்கொண்டு வந்து பிக்ஸ் செய்தேன். எனக்கு வேறு எதுவும் தெரியாது” என்று அவர் கூறியதாகத் தெரிகிறது.ஆனால், சரிதா இதைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளாமல், “நான் எல்லாம் பார்த்துக்கொள்கிறேன். நீங்க எல்லாம் கிளம்புங்க. இந்த விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது. தெரிந்தால் தொலைத்துவிடுவேன்” என்று மிரட்டியதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.
அறையில் தங்கியிருந்த ஒரு பெண், “She has given. I have tracked her on camera for 7 days. I have tracked her on camera 7. Oh god, don’t assume I am saying past records but she has gone. She has entered only one room. She entered at 2:38. I have the footage. I didn’t want to be panic. I want the investigation to happen” என்று தனது அனுபவத்தை விவரித்தார்.
வாட்ஸ்அப் குழுக்களில் பரவல், பெரும் போராட்டம்
இந்த சம்பவம் விடுதியின் வாட்ஸ்அப் குழுக்களில் பரவத் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை (நவம்பர் 4) இரவு 8 மணிக்கு, விடுதியில் தங்கிய 2,000-க்கும் மேற்பட்ட பெண்கள் நுழைவாயிலில் திரண்டனர்.
“என்னென்ன அறைகளில் கேமரா இருக்கிறது எனத் தெரியாது” என்ற பயத்துடன், விடுதி வார்டனையையும் டாட்டா நிர்வாகத்தையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். “கேமரா வைத்தவர்களை கைது செய்யுங்கள்” என்று வாசல் அருகே போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்து 100-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்தில் குவிந்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி தங்கதுரை பேச்சுவார்த்தை நடத்தியதன் பிறகு, விடிய விடிய நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது. “எல்லா அறைகளையும் சோதனை செய்த பிறகே தங்குவோம்” என்று கூறி, பெரும்பாலான பெண்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.
போலீஸ் நடவடிக்கை: கைது, தேடல்
போலீசார் நீலுகுமாரி குப்தாவை கைது செய்துள்ளனர். அவரது காதலன் சந்தோஷ் தலைமறைவாக இருப்பதாகக் கூறி, பெங்களூரு போலீஸுடன் ஒருங்கிணைந்து தேடல் நடத்துகின்றனர்.
ஒவ்வொரு அறையையும் சோதனை செய்ய, சென்னையிலிருந்து சிறப்பு குழு வரவழைக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம், தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை பிரச்சினைகளை மீண்டும் வெளிச்சம் போட்டுள்ளது. டாட்டா நிறுவனம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் விடுக்கவில்லை. போலீஸ் விசாரணை தொடர்கிறது.