நடிகர் STR (சிம்பு) நடிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியானதும் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடசென்னை சாயலில் மாஸ் லுக்கில், கொடூரமான ரவுடி கெட்டப்பில் சிம்பு தோன்றும் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளன. வெளியான சில மணி நேரங்களிலேயே #ArasanTrailer ஹேஷ்டேக் ட்ரெண்டிங் #1-ஆக உயர்ந்துள்ளது.

ஆனால், ரசிகர்களிடையே ஒரே கேள்வி: “இந்த கதையின் உண்மை பின்னணி யார்?” அதற்கான பதில் – சென்னையின் புகழ்பெற்ற ரவுடி மைலாப்பூர் சிவக்குமார்!
மைலாப்பூர் சிவக்குமார்: சென்னையை நடுக்க வைத்த ‘A-பிளஸ்’ ரவுடி
மைலாப்பூர் சிவக்குமார் என்ற பெயர் 1990களில் சென்னை நகரத்தில் பயத்தையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது. போலீஸ் பட்டியலில் ‘A-பிளஸ்’ ரவுடியாக வகைப்படுத்தப்பட்ட இவர், கொலை, கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட வழக்குகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
1997ஆம் ஆண்டு புகழ்பெற்ற ரவுடி தோட்டம் சேகரின் கொலை சம்பவம் அப்போது பெரும் கவனத்தை ஈர்த்தது. அந்த கொலைக்கு பழிவாங்கும் நோக்கத்தில், தோட்டம் சேகரின் மகன் உள்ளிட்டோர் 24 ஆண்டுகள் காத்திருந்து, 2021ஆம் ஆண்டு அசோக் நகரில் மைலாப்பூர் சிவக்குமாரை கொடூரமாகத் தாக்கி கொன்றனர்.
போலீஸ் அறிக்கையின்படி, சிவக்குமாரின் உடலில் 45 வெட்டுக்காயங்கள் இருந்தன. 10 பேர் கொண்ட கும்பல் அவரை ‘கண்ட துண்டமாக’ வெட்டியதாக விசாரணையில் தெரியவந்தது. இது வெறும் கொலை அல்ல, ஆழமான பழிக்குப் பழியின் விளைவு என்பதை வெளிப்படுத்துகிறது.
சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சிவக்குமார், ஒரு பெண்ணை உயிருடன் எரித்த வழக்கிலும் குற்றவாளியாக இருந்ததாக போலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய கொடூர சம்பவங்களுடன் பின்னிப்பிணைந்த அவரது வாழ்க்கை, ‘அரசன்’ படத்தின் உண்மை அடிப்படையாக இருக்கலாம் என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
‘அரசன்’ – ரியல் லைஃப் இன்ஸ்பிரேஷன் அல்லது வடசென்னை யுனிவர்ஸ் அடுத்த அத்தியாயம்?
சிம்பு நடித்த ‘அரசன்’ கதாப்பாத்திரம் மைலாப்பூர் சிவக்குமாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. மறுபுறம், இது வெற்றிமாறன் இயக்கிய ‘வடசென்னை’ படத்தின் கதையை ஒட்டி இந்த படம் உருவாகவுள்ளது என தெரிகிறது.
வடசென்னை படத்தின் கதை நடந்த அதே காலகட்டத்தில் நடக்கும் கதை. எனவே, படத்தில் வடசென்னை படத்தின் காட்சிகளும் தென்பட வாய்ப்பு உள்ளது. காரணம், வடசென்னை படத்தில் இடம்பெற்ற பெரும்பாலான கதாபாத்திரங்கள் நிஜ ரவுடிகளை மையப்படுத்தியது ஆகும்.
ப்ரோமோவில் காட்டப்பட்ட சில காட்சிகள் ‘வடசென்னை’யுடன் தொடர்புடையதாகத் தெரிகின்றன. மட்டுமில்லாமல், வெளிப்படையாகவே, வடசென்னையின் சொல்லப்படாத கதை என்ற அறிவுப்பும் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது. கதாப்பாத்திரங்கள் தொடர்ச்சியாக இருக்கும் என்பதால், அன்பு, ராஜன், செந்தில், குணா, தம்பி போன்ற கதாபாத்திரங்களுடன் ‘அரசன்’ வடசென்னை யுனிவர்ஸின் ஒரு பகுதியாக மாற வாய்ப்புள்ளது.
திரைக்கதையை வெற்றிமாறன் எழுதியுள்ளதாகவும், அவரது ரியலிஸ்டிக் பாணியுடன் அனிருத்தின் இசை இணைந்தால் படம் பெரிய வெற்றி பெறும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், வடசென்னை படத்தின் கதையில் முக்கால் வாசி காட்சிகளுக்கு ஐடியா கொடுத்ததே ரவுடி சிவக்குமார் தான். அந்த அளவுக்கு இயக்குனர் வெற்றிமாறன் ரவுடி சிவக்குமாருடன் பயணித்துள்ளார் என்றும் கூறுகிறார்கள்.
அனிருத்தின் பிறந்தநாள் மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்தப் ப்ரோமோ, ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற்று வருகிறது. சமூக வலைதளங்களில் “சிம்பு மாஸ்.. வடசென்னை ஸ்டைல் சூப்பர்!” போன்ற கருத்துகள் குவிந்துள்ளன.
2025ல் வெளியாகும் ‘அரசன்’ – தமிழ் சினிமாவின் மைல்ஸ்டோன்?
உண்மை சம்பவங்களின் சாயலில் அமைந்த இந்த அதிரடி கதை, மாஸ் எமோஷன்களுடன் வடசென்னை யுனிவர்ஸில் உருவெடுக்கும் என்பதால், 2025இல் வெளியானால் தமிழ் சினிமா வரலாற்றில் இன்னொரு மைல்ஸ்டோனாக மாறும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.
‘அரசன்’ படம் வெளியாகும் வரை, “யார் இந்த மைலாப்பூர் சிவக்குமார்?” என்ற கேள்வி ரசிகர்களைத் துரத்திக் கொண்டே இருக்கும். சிம்புவின் இந்தப் புதிய அவதாரம் தமிழ் சினிமாவை மீண்டும் ஒரு கட்டத்துக்கு கொண்டு வருமா? ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்!
இதனை எப்படி புரிந்து கொள்வது..?
நாட்டின் வளர்ச்சிக்கு துணை நின்ற தலைவர்களின் பயோ-பிக் படங்களுக்கு இந்த அளவுக்கு வரவேற்ப்பு இருந்ததில்லை. ஆனால், குற்றவாளிகள், ரவுடிகளின் பயோ பிக் படங்களுக்கு வரவேற்ப்பு குவிகிறது.
இதனை எப்படி புரிந்து கொள்வது. சிறந்த பொழுது போக்கு படமாக இருக்கும் என்று ரசிகர்கள் நினைகிரார்களா..? அல்லது, ரவுடிகளை ஹீரோ போல கொண்டாடுகிறார்களா..? நம்முடைய கதையும் நாளைக்கு படமாக வரவேண்டும் என்று மோசமான சம்பவங்களில் ஈடுபட இளைஞர்களை தூண்டும் விதமாக இந்த மாதிரியான படங்கள் அமையும் அபாயம் உள்ளதா..? போன்ற திடுக்கிடும் விவாதங்களும் இணைய பக்கங்களில் பேசப்படுவதை பார்க்க முடிகிறது.