திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சாய்பாபா நகர் பகுதியைச் சேர்ந்த 29 வயது இளைஞர் பிரிதிவிராஜ் வர்மா, தனது மனைவி மற்றும் ஒன்றரை வயது குழந்தையுடன் கந்துவட்டி கும்பலால் கடத்தப்பட்டு, அரக்கோணம் வி.எம்.ஆர். லாட்ஜில் அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் தமிழ்ச்செல்வன், அப்பு என்கிற தீபக் மற்றும் லாட்ஜ் உரிமையாளர் பாஸ்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த ஜூலை 5ஆம் தேதி, குடும்பத் தேவைக்காக பிரிதிவிராஜ், ராணிப்பேட்டை மாவட்டம் மரக்கோணத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வனிடம் ₹50,000 வட்டிக்கு வாங்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் ₹10,000 வட்டியாகவும், ₹3,500 சாட்சி கையெழுத்து மற்றும் புரோக்கர் கமிஷனாகவும் பிடித்து, ₹36,500 மட்டுமே பிரிதிவிராஜுக்கு வழங்கப்பட்டது. தினமும் ₹600 வீதம் 85 நாட்களுக்கு பணம் செலுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதன்படி, பிரிதிவிராஜ் ₹24,000 வரை செலுத்தியதாகத் தெரிகிறது. ஆனால், கடந்த ஒரு வாரமாக ஓட்டுநராகப் பணிபுரியும் பிரிதிவிராஜுக்கு வேலை கிடைக்காததால், தவணை செலுத்த முடியவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த தமிழ்ச்செல்வன், தனது கூட்டாளி அப்பு என்கிற தீபக்குடன் கடந்த 20ஆம் தேதி பிரிதிவிராஜின் வீட்டிற்கு வந்து, அவரையும் அவரது மனைவி மற்றும் குழந்தையையும் கடத்தி, அரக்கோணம் வி.எம்.ஆர். லாட்ஜில் அடைத்து வைத்ததாகக் கூறப்படுகிறது.
அங்கு, பிளாஸ்டிக் குழாய், கொம்பு, துடைப்பம் ஆகியவற்றால் பிரிதிவிராஜையும் அவரது மனைவியையும் அடித்து சித்திரவதை செய்து, கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எட்டு மணி நேர சித்திரவதைக்குப் பிறகு, பிரிதிவிராஜை மட்டும் பணம் எடுத்து வருமாறு மிரட்டி வெளியே அனுப்பிய கும்பல், அவரது மனைவி மற்றும் குழந்தையை லாட்ஜில் தொடர்ந்து அடைத்து வைத்திருந்தது.
மேலும், பிரிதிவிராஜை புகைப்படம் எடுத்து, ரவுடிகளுக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பிரிதிவிராஜ் திருத்தணி உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு உடலில் காயங்களுடன் சென்று புகார் அளித்தார்.
புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், உடனடியாக அரக்கோணம் வி.எம்.ஆர். லாட்ஜிற்கு விரைந்து, பிரிதிவிராஜின் மனைவி மற்றும் குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
மேலும், சம்பவத்தில் தொடர்புடைய தமிழ்ச்செல்வன், தீபக் மற்றும் லாட்ஜ் உரிமையாளர் பாஸ்கர் ஆகியோரை கைது செய்தனர். பிரிதிவிராஜின் மனைவி, தனது கணவர் வெளியே அனுப்பப்பட்ட பிறகு, கந்துவட்டி கும்பல் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் தெரிவித்தார்.
மேலும், தனது குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.இந்தச் சம்பவம் திருத்தணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கந்துவட்டி கும்பலின் கொடூர செயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.