
ஒரு நடிகர் ஒரே படத்தில் 45 கேரக்டர்களில் நடித்து சாதனை படைத்துள்ளார். அவரது சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. தற்போது அவர் நிகழ்த்திய சாதனை குறித்த தகவல்கள் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
ஒரே நடிகரால் ஒரு படத்தில் பல்வேறு கேரக்டர்களில் நடிக்க முடியும். தமிழை பொறுத்தவரையில் அதிகபட்சமாக நடிகர் கமல்ஹாசன் “தசாவதாரம்” திரைப்படத்தில் 10 கேரக்டரில் நடித்திருந்தார். அதற்கு முன்பாக “மைக்கேல் மதன காமராஜன்” படத்தில் 4 கேரக்டரில் கமல் ஹாசன் நடித்திருந்தார். இந்த படங்களில் அவரது கேரக்டர்கள் அதிகம் பேசப்பட்டது.
குறிப்பாக “தசாவதாரம்” படத்தில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ராமானுஜர், ரா உளவு அமைப்பைச் சேர்ந்த பல்ராம் நாயுடு, பஞ்சாபி பாடகர் அவதார் சிங், வில்லனாக கிறிஸ்டியன் ஃப்ளெட்சர், அன்றைய அமெரிக்க அதிபராக ஜார்ஜ் புஷ் உள்பட 10 கேரக்டர்களில் நடித்து பெரும் வியப்பை கமல்ஹாசன் ஏற்படுத்தினார்.
ஆனால் அவரை விடவும் ஒரு நடிகர் ஒரே படத்தில் 45 கேரக்டரில் நடித்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். அவர் மலையாள திரையுலகைச் சேர்ந்த நடிகர் ஜான்சன் ஜார்ஜ் என்பவர் ஆவார். மலையாள படமான “ஆராணு என்ஜான்” என்ற படத்தில் தான் இவர் 45 வேடங்களில் நடித்திருக்கிறார்.
இந்த திரைப்படம் 2018 மார்ச் 9 ஆம் தேதி வெளிவந்தது. வீ.ஆர்.உன்னிகிருஷ்ணன் இந்த படத்தை இயக்கி இருந்தார். முதலில் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு காணப்படவில்லை. ஆனால் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற பின்னர் இந்த படத்தை ரசிகர்கள் தேடி தேடி பார்த்தனர்.
“ஆராணு என்ஜான்” படத்தில் ஜான்சன் ஜார்ஜ் மகாத்மா காந்தி, ஏசு கிறிஸ்து, சுவாமி விவேகானந்தர், லியோனார்டோ டா வின்சி உள்பட 45 கேரக்டர்களில் நடித்திருந்தார். இந்த படம் 1 மணி நேரம் 47 நிமிடங்கள் ஓடக்கூடியதாக உருவாக்கப்பட்டது.