
புவி அறிவியல் அமைச்சகத்தின் ஆழ்கடலுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தின் சோதனை முயற்சி வெற்றிகரமாக நடந்துள்ளது.விண்வெளி ஆராய்சி போல, ஆழ்கடல் ஆராய்ச்சியும் முக்கியமானது ஒன்றாகும். சமுத்திரயான் திட்டத்தின் கீழ், தாதுக்கள், நுண் உலோகங்கள் போன்ற ஆழ்கடல் வளங்களை ஆய்வு செய்வதற்காக இந்தியா மூன்று பணியாளர்களை 6 ஆயிரம் மீட்டர் ஆழத்திற்கு ‘மத்ஸ்யா 6000’ என்ற வாகனத்தில் அனுப்ப உள்ளது. இந்த திட்டம் புவி அறிவியல் அமைச்சகத்தின் திட்டம் ஆகும். இதற்கு ரூ.4,800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த மத்ஸ்யா 6000 நீர்மூழ்கி இயந்திரம், நீருக்கடியில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் வகையில் கோள வடிவில் டைட்டானியம் உலோகத்தால் உருவாக்கப்பட்டது. இது சுமார் 6.6 மீட்டர் நீளமும், 210 டன் எடையும், 6,000 மீட்டர் ஆழத்தை அடையும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த நீர்மூழ்கி இயந்திரத்தை இயக்குவதற்காக முன்னாள் கடற்படை அலுவலர்கள், இரண்டு நியாட் ஆய்வாளர்களுக்குப் பயிற்சி அளித்து வருகின்றனர்.
2026ம் ஆண்டிற்குள் செயல்பாட்டுக்கு வரசெய்வதை குறிக்கோளாக வைத்து ஆராய்ச்சியாளர்கள் மும்முரமாக பணியாற்றி வருகின்றனர். இதற்கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த திட்டத்தின் சோதனையை கடந்த ஜனவரி 27ம் தேதி முதல் பிப் 12ம் தேதி வரை சென்னையில் உள்ள தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம் வெற்றிகரமாக நடத்தி உள்ளது.
ஆழ்கடலில் மனிதரை அனுப்பி 15 நாட்களுக்கு மேல் சோதனை நடத்தப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர். கடலுக்கு அடியில் இருக்கும் நிக்கல், கோபால்ட், மாங்கனீசு, பூமியின் அரியதாதுக்கள் போன்ற கனிம வளங்களை கண்டுபிடிப்பதற்கும் அதன் மாதிரிகளை சேகரிப்பதற்கும் மனிதர்களை ஆழ்கடலுக்கு அனுப்புகின்றனர். இந்த திட்டம் 2026ம் ஆண்டுக்குள் நிறைவேறும் என புவி அறிவியல் அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.