
கீதா கைலாஷ், சமீப காலமாக தமிழ் சினிமாவை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் நடிகை. எந்த வயதிலும் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கலாம் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார்.
இத்தனை திறமை இருக்கும் இந்த நடிகை பிரபல இயக்குனரின் மருமகள் என்று தெரிய வரும்போது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது.
பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார்.அமரன் படத்தில் வரும் அப்பாவியான அம்மாவாக இருக்கட்டும், லப்பர் பந்து படத்தில் வரும் வெகுளியான மாமியாராக இருக்கட்டும் மனதில் நின்று விட்டார்
சமீபத்தில் ரிலீஸ் ஆன எமகாதகி படத்தில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் தற்போது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.படம் முழுக்க அதிர்ச்சியில் உறைந்திருக்கும் அம்மாவாக அமைதியாகவே இருப்பார். கிளைமாக்ஸ் காட்சியில் படம் முழுக்க நடித்தவர்கள் அத்தனை பேரையும் மறக்கடிக்கும் அளவுக்கு நடிப்பு அரக்கியாய் மாறி இருப்பார்.
இயக்குனர் இமயம் கே பாலச்சந்தரின் மகன் பால கைலாசின் மனைவி தான் இந்த கீதா கைலாஷ். சி ஏ படித்துவிட்டு திருமண வாழ்க்கையில் நுழைந்த இவர் கவிதாலயாவின் தயாரிப்பு கணக்குகளை கவனித்துக் கொண்டார்.நடிப்பு துறையில் அதிக ஆர்வம் இருந்த இவருக்கு சார்பட்டா பரம்பரை புதிய பயணத்தை தொடங்கி வைத்திருக்கிறது.