
நடிகை குஷ்புவும் இயக்குநர் சுந்தர்.சி-யும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அவந்திகா, அனந்திகா என்ற மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சுந்தர்.சி – குஷ்பு திருமணம் முடிந்து நேற்றோடு 25 வருடங்கள் ஆகிவிட்டன. இதையடுத்து பழனி முருகன் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று சுந்தர்.சி, வழிபட்டார். பின்னர் அவர் முடிகாணிக்கை செலுத்தினார்.
கோயில் நிர்வாகம் பிரசாதங்கள் வழங்கியது. பின்னர் சுந்தர். சி, சார்பில் பக்தர்களின் அன்னதானத்துக்கு நன்கொடை வழங்கப்பட்டது. கோயிலில் அவர்களைக் கண்ட ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இந்நிலையில் தனது சமூக வலைதளப்பக்கத்தில் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ள குஷ்பு, “எனது 25-வது திருமண நாளன்று என் திருமணப் புடவையை அணிவதில் பெருமை அடைகிறேன். பழனி முருகனின் ஆசியுடன் இந்த நாளைத் தொடங்கியுள்ளோம். அவர் ஆசியில்லாமல் எங்களின் இந்த வாழ்க்கை சாத்தியமாகி இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.