
5 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு, நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி நடிகர் வடிவேலு சாட்சியம் அளித்தார்.
யூ டியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டியில், தன்னைப் பற்றி அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாய் மானநஷ்டஈடாக வழங்க சிங்கமுத்துவுக்கு உத்தரவிடக் கோரியும், தன்னைப் பற்றி அவதூறாக பேச தடை விதிக்க வேண்டும் எனவும் நடிகர் வடிவேலு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக விசாரணையை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்றம் மாற்றியது. இந்நிலையில் சாட்சியம் அளிப்பதற்காக மாஸ்டர் நீதிமன்றத்தில் நடிகர் வடிவேலு ஆஜரானார். அப்போது, சாட்சிக் கூண்டில் ஏறி வடிவேலு சாட்சியம் அளித்தார்.
இதையடுத்து சிங்கமுத்து தரப்பு வழக்கறிஞர், வடிவேலுவிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும், அதற்காக வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதனை ஏற்க மறுப்பு தெரிவித்த நீதிபதி, வழக்கை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பிவைப்பதாகவும் குறுக்கு விசாரணை தொடர்பாக அங்கே முறையிட்டுக் கொள்ளலாம் எனக்கூறி வழக்கை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார்.