
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக டெல்லி புறப்பட்ட அமெரிக்க விமானம் ரோம் நகருக்கு திருப்பிவிடப்பட்டது. இத்தாலி வான் எல்லைக்குள் வந்த அந்த விமானம் இரண்டு ஃபைட்டர் ஜெட்கள் சூழ பாதுகாப்பாக ரோமில் தரையிறக்கப்பட்டது.
அமெரிக்காவின் ஜான் எஃப் கென்னடி சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை AA292 என்ற விமானம் டெல்லி புறப்பட்டது. போயிங் ரக விமானமான அதில் 199 பயணிகளும் 15 ஊழியர்களும் இருந்தனர். விமானம் கரிபியன் கடலுக்கு மேல் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து விமானம் இத்தாலியின் ரோம் நகர விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டது.
அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட இரண்டு மணி நேரத்திலேயே திரும்பி விடப்பட்ட விமானம், இத்தாலி வான் எல்லைக்குள் நுழைந்தபோது அதற்கு அந்நாட்டின் இரண்டு ஃபைட்டர் ஜெட் விமானங்கள் பாதுகாப்பாக சென்றன.
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விமானத்துடன் அது தரையிறங்கவிருக்கும் நாட்டின் போர் விமானங்கள் செல்வது உலக நாடுகளின் பாதுகாப்பு நடைமுறைகளில் வழக்கமான ஒன்று எனக் கூறப்படுகிறது. அதன்படியே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்க விமானத்துடன் இத்தாலி ஃபைட்டர் ஜெட் விமானங்கள் பறந்தன.
பின்னர் ரோம் விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டு பயணிகள் அனைவரும் அதி விரைவாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். தரையிரக்கப்பட்ட விமானம் முழுவதும் தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. அதில் வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படாததால், புரளி என்பது உறுதியானது. எனினும் விமான பைலட்டுகள் மற்றும் ஊழியர்களின் ஓய்வைக் கருத்தில் கொண்டு ஞாயிறு இரவு வரை அந்த விமானம் இத்தாலியிலேயே நிறுத்தப்பட்டது.
கடந்த ஆண்டு மட்டும் ஆயிரம் விமானங்களுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். போலி வெடிகுண்டு மிரட்டல்களால், நேர விரயம், செலவினங்கள், மன உளைச்சல் என பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. அமெரிக்காவில் மிரட்டல்கள் அதிகரித்து வருவதால், ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து கூட்டு கண்காணிப்பு குழுவை அமைக்க அமெரிக்க விமானத்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.