
‘டைம்’ இதழின், இந்தாண்டுக்கான சிறந்த பெண்கள் பட்டியலில், அசாமை சேர்ந்த உயிரியலாளரும், வனவிலங்கு பாதுகாவலருமான பூர்ணிமா தேவி பர்மன் இடம் பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக வைத்து, பிரபல, ‘டைம்’ இதழ் வெளியாகி வருகிறது. 2025க்கான சிறந்த பெண்கள் பட்டியலை, டைம் இதழ் வெளியிட்டுள்ளது.இதில், நம் நாட்டின் சார்பில், வடகிழக்கு மாநிலமான அசாமின் குவஹாத்தியைச் சேர்ந்த உயிரியலாளரும், வனவிலங்கு பாதுகாவலருமான பூர்ணிமா தேவி பர்மன்(45) இடம் பிடித்துள்ளார்.
மொத்தம் 13 பேர் அடங்கிய பட்டியலில், ஹாலிவுட் நடிகை நிக்கோல் கிட்மேன், பிரான்சின் கிசெல் பெலிகாட் ஆகியோரும் இடம் பெற்று உள்ளனர்.கிசெல் பெலிகாட்டுக்கு அவரது கணவர் போதைப் பொருள் கொடுத்த நிலையில், அவரை 70க்கும் மேற்பட்டோர் பலாத்காரம் செய்தனர்.இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து, பாலியல் வன்முறைக்கு எதிரான பிரசாரத்தில், உலகளாவிய துாதராக, கிசெல் பெலிகாட் மாறினார்.
‘ஹர்கிலா’ என அசாமில் பரவலாக அறியப்படும், நாரை இனத்தைச் சேர்ந்த பறவை இனம், அழிந்து வரும் நிலையில் உள்ளது. இதை அழிவிலிருந்து காக்க தொடர்ந்து போராடி வருகிறார் பூர்ணிமா தேவி பர்மன்.இதற்காக ‘ஹர்கிலா ஆர்மி’ என்ற பெண்களின் குழு ஒன்றை அவர் நடத்தி வருகிறார். இக்குழுவில் உள்ள பெண்கள் ஹர்கிலா பறவையின் உருவம் பொறிக்கப்பட்ட ஜவுளிகளைத் தயாரித்து விற்பனை செய்கின்றனர்.ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தால், 2022-க்கான, ‘சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்’ விருதை பூர்ணிமா தேவி பர்மன் பெற்றார். இவர், விட்லி விருதையும், பெண்களுக்கான மிக உயர்ந்த குடிமகன் விருதான நாரி சக்தி புரஸ்கார் விருதுகளையும் பெற்றுள்ளார்.