
தமிழக மீனவர்கள் 14 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் 10 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள் மன்னார் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி மூன்று படகுகளுடன் 10 மீனவர்களை சிறைபிடித்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களில் ஒரு குழுவினரை தலைமன்னார் துறைமுகத்திற்கும், மற்றொரு குழுவினரை யாழ்ப்பாணம் துறைமுகத்திற்கும் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர். கடந்த 8 ஆம் தேதி சிறைபிடிக்கப்பட்ட 14 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் 10 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டது மீனவ கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது வரை இலங்கை சிறையில் 70-க்கும் மேற்பட்ட மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 20-க்கும் மேற்பட்டோர் தண்டனை கைதிகளாக உள்ளனர். அவர்கள் அனைவரையும் தாயகம் மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.