
விசாகப்பட்டினத்தில் சுற்றுலா முகவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சுற்றுலா வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது வரும் ஜுன், ஜூலை மாதங்களில் சென்னை- விசாகப்பட்டினம்- புதுச்சேரி இடையே 3 சேவைகள் சுற்றுலா கப்பல் இயக்குவது குறித்து உறுதி செய்யப்பட்டது.
அதன்படி, வரும் ஜூன் 30-ம் தேதி சென்னையில் புறப்படும் கப்பல் ஜூலை 2-ம் தேதி விசாகப்பட்டினம் வந்தடையும். இந்த கப்பல் அதே நாளில் விசாகப்பட்டினத்தில் புறப்பட்டு 4-ம் தேதி புதுச்சேரி சென்றடையும். மீண்டும் 4-ம் தேதி புதுச்சேரியில் புறப்பட்டு மறுநாள் 5-ம் தேதி சென்னை வந்தடையும்.
இரண்டாவது சேவையாக இந்த கப்பல் ஜூலை 7-ல் சென்னையில் புறப்பட்டு 9-ம் தேதி விசாகப்பட்டினம் வந்தடையும். அதேநாளில் இங்கிருந்து புறப்பட்டு 11-ம் தேதி புதுச்சேரி சென்றடையும். பின்னர் அதேநாளில் புதுச்சேரியில் புறப்பட்டு 12-ம் தேதி சென்னை வந்தடையும்.
மூன்றாவது சேவையாக இந்த கப்பல் ஜூலை 14-ல் சென்னையில் புறப்பட்டு 16-ம் தேதி விசாகப்பட்டினம் வந்தடையும். பிறகு அதேநாளில் இங்கிருந்து புறப்பட்டு 18-ல் புதுச்சேரி சென்றடையும். மீண்டும் அதே நாளில் புதுவையில் இருந்து புறப்பட்டு மறுநாள் 19-ம் தேதி சென்னை வந்தடையும்.
கார்டில்லா க்ரூஸ் நிறுவனம் சார்பில் இந்த சுற்றுலா கப்பல் இயக்கப்படும். இதற்கான கட்டண விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.