
விஜய் நடித்த ‘மாஸ்டர்’, ‘லியோ’, விஜய் சேதுபதி நடித்த ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படங்களை, செவன் ஸ்கீரின் ஸ்டூடியோ சார்பில் தயாரித்தவர் எஸ்.எஸ்.லலித்குமார். இப்போது ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தைத் தயாரித்து வரும் அவர், அடுத்து தயாரிக்கும் படத்தில் அவரது மகன் எல்.கே.அக்ஷய்குமார் அறிமுகமாகிறார். இதில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கிறார்.
வெற்றிமாறனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய சுரேஷ், இயக்குநராக அறிமுகமாகிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்கிறார்.
இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படம் பற்றி இயக்குநர் சுரேஷ் கூறும்போது, “ இதன் கதையை ‘டாணாக்காரன்’ தமிழ் எழுதியுள்ளார். உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள கதை. போலீஸ்காரர் விக்ரம் பிரபு, குற்றவாளியான அக்ஷய் குமாரை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் போது நடக்கும் உரையாடல்தான் படம். சிவகங்கை பின்னணியில் கதை நடக்கிறது. இந்தப் படத்துக்காக நடிப்புப் பயிற்சிப் பெற்றுள்ள அக்ஷய் குமார் இந்த கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார். முதல் கட்டப் படப்பிடிப்பு இப்போது தொடங்கி இருக்கிறது” என்றார்.