
சென்னை,விமானங்களின் விபரங்கள் மற்றும் விமான நிலைய வழிகாட்டுதல்களுக்காக, ‘சென்னை சர்வதேச விமான நிலையம்’ என்ற செயலி, விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
இதுகுறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:சென்னை விமான நிலையத்தில், பயணியர் சிரமமின்றி வந்து செல்ல, விமான நிலைய ஆணையம் சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, சென்னை சர்வதேச விமான நிலையம் என்ற செயலி உருவாக்கப்பட்டு உள்ளது.
இதில், விமானங்கள் குறித்த, ‘ரியல் டைம்’ தகவல்கள், தற்போதைய நிலை போன்ற வசதிகளை அறிய முடியும். விமான நிலையத்திற்குள் உள்ள உணவகங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வழிகாட்டி வசதிகளும் உள்ளன.
மொபைல், ‘புளூடூத்’ இணைத்து, இவற்றை துல்லியமாக பயன்படுத்த முடியும். பயணியர் சந்திக்கும் சவால்கள் மற்றும் புகார்களுக்கென தனி வசதிகளும், இதில் இடம் பெற உள்ளன.பயணியர் டிக்கெட் மற்றும் மொபைல் எண் விபரங்களை உள்ளிட்டு புகார் அளிக்கலாம். புகார்களுக்கு 15 நிமிடங்களில் தீர்வு காண, குழுவையும் ஏற்படுத்த உள்ளோம். விரைவில் இந்த செயலி பயன்பாட்டிற்கு வரும் என்று அவர்கள் கூறினர்.