
எச்5என்1 என்பது பறவைக் காய்ச்சல் என அழைக்கப்படுகிறது. இது பறவைகள் மற்றும் பசுக்கள் உள்ளிட்ட பாலூட்டிகளுக்கு பரவுகிறது. அரிதாக மனிதர்களுக்கும் பரவ வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ் தொற்று கடந்த 2021, 2023 மற்றும் 2024-ல் சில மாநிலங்களில் பரவியது. கோழிகள், பறவைகளுக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த மாதம் மகாராஷ்டிர மாநிலம் சந்திரபூர் மாவட்டம் மாங்லி கிராமத்தில் உள்ள கோழிப் பண்ணையில் இருந்த கோழிகள் இறந்தன. அவற்றின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் எச்5என்1 வைரஸ் பரவியது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்த வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசியை உள்நாட்டிலேயே தயாரிக்கும் முயற்சியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து ஐசிஎம்ஆர் வெளியிட்ட அறிக்கையில், “எச்5என்1 வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் தடுப்பூசியை தயாரிக்க மருந்து உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட ஐசிஎம்ஆர் முடிவு செய்துள்ளது. அவ்வாறு இணைந்து செயல்படும் நிறுவனங்களுக்கு, வரும் காலத்தில் அந்த மருந்தை தயாரித்து விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.