
மத்தியபிரதேச மாநிலம் போபால் அருகிலுள்ள கங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் மங்களா பாம்நேரே (48). இவரது மகன் உமேஷ் பாம்நேரே.இந்நிலையில் கடந்த மாதம் 28-ம் தேதி மங்களாவுக்கு பக்கவாத நோய் ஏற்பட்டு கீழே விழுந்தார். இதையடுத்து அவரை நாரியல்கேடாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் மகன் உமேஷ் சேர்த்துள்ளார்.
அப்போது மங்களாவுக்கு, மண்ணெண்ணை கொடுத்தால் பக்கவாத நோய் தீரும் என்று உமேஷிடம் யாரோ சிலர் அறிவுரை கூறியுள்ளனர். இதை நம்பிய அவர், தாய்க்கு சிறிது மண்ணெண்ணையை குடிக்கக் கொடுத்துள்ளார்.
இதனால் அவரது உடல்நிலை இன்னும் மோசமடைந்தது. பின்னர் அவர் அங்குள்ள எய்மஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, தாய்க்கு மண்ணெண்ணை குடிக்கக் கொடுத்ததாக உமேஷ் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.